தோனியுடன் ஒப்பிடலாமா: என்ன சொல்கிறார் ரோகித் | ஆகஸ்ட் 04, 2020
புதுடில்லி: ‘‘தோனியை போல யாரும் இருக்க முடியாது. எனவே அவருடன், என்னை ஒப்பிடக் கூடாது,’’ என, ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 33. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஐ.சி.சி., உலக கோப்பையில் (50 ஓவர்) 5 சதமடித்த இவர், ஒருநாள் போட்டியில் மூன்று முறை இரட்டை சதமடித்துள்ளார். ஐ.பி.எல்., தொடரில் இவரது தலைமையிலான மும்பை அணி 4 முறை கோப்பை வென்றுள்ளது.
சமீபத்தில், ‘ரோகித் சர்மா தான் இந்திய அணியின் அடுத்த தோனி,’ என, ரெய்னா தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ரோகித் சர்மா ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘ஆம், ரெய்னா கூறிய கருத்தை கேட்டேன். தோனி ஒரு வகையானவர். அவரை போல யாரும் இருக்க முடியாது. எனவே அவருடன், என்னை ஒப்பிட முடியாது என்று நம்புகிறேன். ஒவ்வொரு தனிநபரும் வித்தியாசமானவர்கள். ஒவ்வொருவருக்கும் பலம், பலவீனம் உண்டு,’’ என, தெரிவித்திருந்தார்.